செய்திகள்
டெல்லி வன்முறை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் - சபாநாயகர் ஓம் பிர்லா
டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று கூடியது. டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையே, பாராளுமன்றத்தின் மாநிலங்களவை 11 மணிக்கு கூடியதும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாநிலங்களவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
2 மணிக்கு பின்னர் அவை மீண்டும் கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற மேலவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அனைவரும் சபாநாயகர் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் 11-ம் தேதி விவாதம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.