செய்திகள்
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள்

பாராளுமன்றத்தில் மல்லுக்கட்டிய காங்கிரஸ்-பாஜக எம்.பி.க்கள்

Published On 2020-03-02 10:06 GMT   |   Update On 2020-03-02 13:25 GMT
டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று அமளி ஏற்பட்டபோது காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. 

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். ஆனால், வன்முறை தொடர்பாக விவாதிக்க இப்போது நேரம் ஒதுக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக கூறினார்.

இதனை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்பிக்கள் சிலர், காங்கிரஸ் உறுப்பினர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். 

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நெட்டித் தள்ளினர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை முதலில் 3 மணி வரையிலும், பின்னர் 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 
Tags:    

Similar News