செய்திகள்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

அவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கக் கூடாது... மாணவர் சங்கத்திற்கு ஜேஎன்யு எச்சரிக்கை

Published On 2020-02-29 04:05 GMT   |   Update On 2020-02-29 04:05 GMT
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிக தங்குமிடம் கொடுக்க முயற்சிக்கும் மாணவர் சங்கத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவர பகுதியில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் பதற்றம் நீடிப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் தற்காலிகமாக தங்கும் இடம் (ஷெல்டர்கள்) வழங்க மாணவர் சங்கம் முயற்சித்து வருவதாக நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



அந்த அறிவிப்பில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் தங்குமிடம் வழங்கினால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘ஜேஎன்யு போன்ற ஒரு கல்வி நிறுவனத்தை ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.  ஜேஎன்யு மாணவர் சங்கத்திற்கு பல்கலைக்கழக வளாகத்தை தங்குமிடம் ஆக்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. ஜேஎன்யூ வளாகத்தில் குடியிருக்கும் மக்களுக்கு ஏதேனும் அசவுகரியம் அல்லது பாதுகாப்பின்மை ஏற்பட்டால், அதற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் பொறுப்பு’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News