செய்திகள்
ரவிசங்கர் பிரசாத்

ராஜதர்மம் குறித்து காங்கிரஸ் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் - ரவிசங்கர் பிரசாத் ஆவேசம்

Published On 2020-02-28 14:37 GMT   |   Update On 2020-02-28 14:37 GMT
ராஜதர்மம் குறித்து சோனியா காந்தி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
புதுடெல்லி:

மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த காங்கிரஸ் தூதுக்குழு ராஜ தர்மம் குறித்து மற்றவர்களுக்கு நினைவூட்ட முயற்சிக்கிறது. ஆனால், அது ஏன் பிரச்சினைகளில் தனது நிலையை மாற்றுகிறது என்பதை  தெளிவுபடுத்த வேண்டும். 

நான் சோனியா காந்தியிடம் கேட்கிறேன். வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்டவர்களைப் பற்றி உங்கள் மூத்த தலைவர்களுக்கு ஒரு பார்வை இருந்தது.

உகாண்டாவிலிருந்து தப்பி ஓடிய மக்களுக்கு இந்திரா காந்தி உதவி வழங்கினார். ராஜீவ் காந்தி இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கு உதவினார். குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் எல்.கே.அத்வானியை வலியுறுத்தினார்.

ஆனால், அசோக் கெலாட் காங்கிரஸ் கூட்டணி  மற்றும் பா.ஜனதா கூட்டணி இரண்டிலும் உள்ள உள்துறை அமைச்சர்களுக்கு குடியுரிமைக்காக கடிதம் எழுதியிருந்தார். தருண் கோகாயும் அப்படித்தான். 

சிஏஏ குறித்து முழு பிரச்சினையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. நீங்கள் ஏன் மக்களைத் தூண்டி விடுகிறீர்கள். கொள்கை விவகாரங்களில் நிலைப்பாட்டை மாற்றும் கொள்கையை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. மார்ச் 15, 2010 அன்று, காங்கிரஸ் கூட்டணி  என்.பி.ஆர் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது, இப்போது அதை எதிர்க்கிறது. 

அப்போது  நாட்டின் நன்மைக்காக என காங்கிரசால் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைச் செய்யும்போது அது அனுமதிக்கப்படுகிறது, நாங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் மக்களைத் தூண்டுகிறீர்கள். கலவரத்தை அரசியல் மயமாக்குவதற்கான காங்கிரசின் முயற்சிகளை பாஜக கண்டிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News