செய்திகள்
வெறுப்புணர்வு பேச்சு- சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக வழக்கு
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர்கள் வாரிஸ் பதான், அக்பருதீன் ஒவைசி ஆகியோர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வெறுப்புணர்வு பேச்சு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்களின் மனுக்களுக்கு பதில் மனுக்கள் தாக்கல் செய்யும்படி உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு மற்றும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.