செய்திகள்
டெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை போலீசார் அமைத்துள்ளனர்.
புதுடெல்லி:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வீடுகளை இழந்தோர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்களை போலீசார் அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.