செய்திகள்
நீதிபதி முரளிதர்

டெல்லி போலீசை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதி இடமாற்றம்- எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

Published On 2020-02-27 06:15 GMT   |   Update On 2020-02-27 06:15 GMT
டெல்லியில் நடைபெற்ற வன்முறையின் போது காவல்துறையின் செயல்பாட்டை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:

டெல்லி வடகிழக்கு பகுதியில் கலவரம் வெடித்ததும், வன்முறையை ஒடுக்கவும், கலவரக்காரர்களை கைது செய்யக்கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு அவசரம் கருதி நேற்று முன்தினம் இரவு நீதிபதி முரளிதர் வீட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி முரளிதர், போலீசாருக்கு சில உத்தரவுகளை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் அந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் வெறுப்புணர்வுடன் பேசியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. உடனே நீதிபதி முரளிதர் அதற்கான ஆதாரம் கேட்டார்.

அதன்பேரில் பா.ஜனதா தலைவர்கள் சிலரது பேச்சு மற்றும் அவர்கள் டுவிட்டர், பேஸ்புக்கில் வெளியிட்ட தகவல்கள் கோர்ட்டில் காட்டப்பட்டன. அதை பார்த்த நீதிபதி முரளிதர் “பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், அபய் வர்மா, பர்வேஷ் சர்மா ஆகிய 4 பேர் மீதும் ஏன் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் 4 பேர் மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார்.

அதோடு நீதிபதி முரளிதர் மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் டெல்லி போலீசாரை மிக கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “நாட்டில் 1984-ம் ஆண்டு நடந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார். மேலும் டெல்லி போலீசார் சரியாக செயல்படவில்லை என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைப்பதாக கூறினார்.

நீதிபதி முரளிதரின் இந்த கருத்தும், உத்தரவும் பா.ஜனதா மூத்த தலைவர்களிடம் மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.

அப்போது நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி முரளிதர் டெல்லி ஐகோர்ட்டில் இருந்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை நேற்று இரவு 11 மணிக்கு வெளியிடப்பட்டது.

அந்த உத்தரவில், “நீதிபதி முரளிதர் எப்போது பஞ்சாப்-அரியானா கோர்ட்டுக்கு சென்று பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. உடனடியாக டெல்லி பணிகளை விடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இடமாற்றம் செய்யப்படும் நீதிபதிகளுக்கு புதிய இட பணியை ஏற்க 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

நீதிபதி முரளிதர் டெல்லி ஐகோர்ட்டில் 3-வது மூத்த நீதிபதி அந்தஸ்தில் இருந்தார். அதே அந்தஸ்தில் அவர் பஞ்சாப்-அரியானா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீதிபதி முரளிதர் இடமாற்றம் வருத்தமாகவும், வெட்கம் தருவதாகவும் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் நீதிபரிபாலனம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதை பா.ஜனதா அரசு சீர்குலைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நள்ளிரவில் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வீரத்துடன் செயல்பட்ட நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று காலை நிருபர்களிடம் பேசுகையில், “நாட்டுக்காக நீதி வழங்குபவர்களையும் இந்த அரசு விட்டு வைக்கவில்லை. கலவர வழக்கை விசாரித்த நீதிபதியை இடமாற்றம் செய்து பா.ஜனதா அரசு அநீதி செய்துள்ளது.

பா.ஜனதா தலைவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டதால் அவர் பழிவாங்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவின் இந்த அரசியல் கலாச்சாரம் நெருக்கடியில் ஆழ்த்த வைக்கிறது” என்றார்.

காங்கிரஸ் தலைவர்களின் இந்த சரமாரி குற்றச்சாட்டுகள் காரணமாக நீதிபதி முரளிதர் இடமாற்றம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி முரளிதர் பழி வாங்கப்பட்டதாக மற்ற எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன.

ஆனால் மத்திய அரசு இதை மறுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவர்கள் கூறுகையில், “நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக 2 வாரங்களுக்கு முன்பு சில பரிந்துரைகளை கொலிஜியம் அளித்தது. அதன் அடிப்படையில் நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அரசியல் ஆக்க முடியாது” என்றனர்.
Tags:    

Similar News