செய்திகள்
டெல்லி - வன்முறை ஏற்பட்ட இடங்களில் கெஜ்ரிவால், சிசோடியா நேரில் சென்று ஆய்வு
வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
புதுடெல்லி:
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
வன்முறையால் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நிலைமை மோசமாக உள்ளது. வன்முறையில் உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழந்தது துரதிர்ஷடவசமானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அங்கு டெல்லி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்தனர்.
இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதையடுத்து, டெல்லி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் இன்று இரவு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.