செய்திகள்
டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் இன்று காலை உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.