செய்திகள்
டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்- பிரதமர் வேண்டுகோள்
டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் சகோதரத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த மூன்று தினங்களாக நடந்த வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆயுதப்படை போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டதையடுத்து, வன்முறை தணிந்துள்ளது. இருப்பினும் பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். டெல்லி மக்கள் சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். அமைதி, ஒற்றுமையே நமது பண்பாட்டின் அடையாளங்கள் ஆகும். இயல்புநிலை விரைவில் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலமை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வன்முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். அமைதி, இயல்பு நிலை திரும்ப காவல்துறையினரும் அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு மோடி கூறி உள்ளார்.