செய்திகள்
காயமடைந்தவர்களை சந்தித்த மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன்

டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய மந்திரி

Published On 2020-02-25 21:43 GMT   |   Update On 2020-02-25 21:43 GMT
டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் டில்ஷத் கார்டன் பகுதியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காயமடைந்து குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையில், வன்முறையை கட்டுப்படுத்த கலவரம் நடைபெற்ற பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் பார்வையிட்டு வருகிறார். மேலும், வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Tags:    

Similar News