செய்திகள்
மெலனியா டிரம்ப்

பள்ளிக்குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா டிரம்ப்

Published On 2020-02-25 07:00 GMT   |   Update On 2020-02-25 07:00 GMT
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.
புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது குடும்பத்தாருடன் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இரு நாள் பயணமாக வந்துள்ள டிரம்பை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். முதல் நாளான நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். அவர்களுடன் மோடி சென்றார். 

பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதன்பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.

இரண்டாம் நாளான இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்கிறார். காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லி தெற்கு மோதிபாக் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை பார்வையிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், மெலனியா டிரம்ப் டெல்லியின் மோதிபாக் பகுதியில் உள்ள அரசு சர்வோதயா மேல்நிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகளை சந்தித்து உரையாடினார்.

மெலனியா டிரம்பை பள்ளிக்குழந்தைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாரம்பரிய உடையணிந்திருந்த குழந்தைகள் மெலனியாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வருகைக்காக பள்ளி முழுவதும் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் வகுப்பறைக்கு சென்ற மெலனியா டிரம்ப் மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.
Tags:    

Similar News