செய்திகள்
காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய டிரம்ப்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். முதல் நாளான நேற்று சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். அவர்களுடன் மோடி சென்றார்.
பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதன்பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.
இரண்டாம் நாளான இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து டிரம்ப், மெலனியா டிரம்ப் இருவரும் ராஜ்காட் சென்றனர். அங்கு காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் டிரம்ப் தனது கருத்தை பதிவு செய்தார். அப்போது டிரம்புக்கு காந்தி உருவச்சிலை பரிசளிக்கப்பட்டது.