செய்திகள்
டிரம்பை வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு

Published On 2020-02-25 04:47 GMT   |   Update On 2020-02-25 04:47 GMT
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்புக்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். முதல் நாளான நேற்று சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். அவர்களுடன் மோடி சென்றார். 

பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதன்பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். தாஜ்மகாலை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்த டிரம்ப் தம்பதியினர், பல இடங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மறுபுறம் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மகாலின் அழகை ரசித்தவாறே புகைப்படமும், செல்பி படங்களும் எடுத்துக்கொண்டனர்.



இரண்டாம் நாளான இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்கிறார். காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து வர, டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் காரில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். ஒருவரையொருவர் கைகுலுக்கியதுடன், இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து டிரம்புக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். 

அதன் பின்னர் டிரம்புக்கு முக்கிய பிரமுகர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிமுகம் செய்து வைத்தார்.
Tags:    

Similar News