செய்திகள்
பயிற்சி விமானம் விபத்து

விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி உயிரிழப்பு

Published On 2020-02-24 23:24 GMT   |   Update On 2020-02-24 23:24 GMT
விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஜி.எஸ்.சீமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாட்டியாலா:

பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள ஒரு கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் விமானப்படையின் பயிற்சியை பார்வையிடுவதற்காக அங்குள்ள விமானப்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விமானப்படை வீரர்கள் விமானங்களை இயக்குவதை அவர்கள் பார்வையிட்டனர்.

அப்போது விபின் குமார் யாதவ் என்ற மாணவரை ஏற்றிக் கொண்டு ஜி.எஸ்.சீமா என்ற விமானப்படை விமானி, பயிற்சி விமானம் ஒன்றில் வானில் பறந்தார். இந்த விமானம் பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் சென்ற போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் விமானி ஜி.எஸ்.சீமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர் விபின் குமார் யாதவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பஞ்சாபில் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News