செய்திகள்
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது- பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் டிரம்ப், மோடி உரை

Published On 2020-02-24 08:25 GMT   |   Update On 2020-02-24 09:55 GMT
அகமதாபாத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உரையாற்றினர்.
அகமதாபாத்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். 

வாஷிங்டன் நகரில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். பிரதமர் மோடி, விமான நிலையத்துக்கு நேரில் வந்து டிரம்ப் தம்பதியரை வரவேற்றார். 

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் சென்று சுற்றிப் பார்த்தார். ஆசிரமத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை டிரம்ப் பார்வையிட்டார். அந்த ராட்டையில் நூல் நூற்பது குறித்து டிரம்பிடம் நிர்வாகிகள் விளக்கி கூறினார்கள். அதன்படி டிரம்பும் மெலனியாவும் ராட்டையை சுழற்றி, நூல் நூற்க முயற்சி செய்தனர். பிரதமர் மோடி அவர்களுக்கு ராட்டையின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். 



சபர்மதி ஆசிரம நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா ஸ்டேடியத்திற்கு வந்தார் டிரம்ப். அங்கு டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை டிரம்புக்கு மோடி அறிமுகம் செய்து வைத்தார். 

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் உள்துறை மந்திரி அமித் ஷா, மாநில முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



மொடேரா ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி டிரம்பை வரவேற்றனர். 

கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இரு நாட்டு தேசிய கீதங்கள் முழங்க, ‘நமஸ்தே டிரம்ப்’  நிகழ்ச்சி தொடங்கியது. மோடியும், டிரம்பும் மக்களிடையே உரையாற்றினர். 
Tags:    

Similar News