செய்திகள்
ரத்தன் டாடா

அந்த பல்கலைக்கழக மாணவர்களை பணியமர்த்த மாட்டோம் என ரத்தன் டாடா சொன்னாரா?

Published On 2020-02-24 07:45 GMT   |   Update On 2020-02-24 07:45 GMT
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அந்த பல்கலைக்கழக மாணவர்களை பணியமர்த்த மாட்டோம் என கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகிறது.



டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை டாடா குழுமத்தில் பணியமர்த்த மாட்டோம் என தெரிவித்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. 

வைரல் புகைப்படத்துடன்: "ரத்தன் டாடா சாஹப்-இன் மிகப்பெரிய அறிவிப்பு: "இனி டாடா குழும நிறுவனங்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்த மாணவரையும் பணியில் சேர்க்காது. நாட்டிற்கு விசுவாசமில்லாதவர்கள், எப்படி நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பர் என நம்ப முடியும்?." எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



இதுகுறித்த ஆய்வுகளில், இதே தகவல் பல்வேறு தலைப்புகளில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், ரத்தன் டாடா இதுபோன்ற தகவலினை கூறவில்லை என டாடா குழு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஜனவரி 5, 2020 அன்று நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. ஜனவரி 5-ம் தேதி நடைபெற்ற வன்முறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் தாக்குதலுக்கு ஆளானதோடு மட்டுமின்றி பல்கலைக்கழக பொருட்களும் சேதமடைந்தது.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்களமாகவும் பல்கலைக்கழகம் மாறியது. குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் அறிவிக்கப்படுவதற்கு முன் பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. 

ஏற்கனவே பல சமயங்களில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து ரத்தன் டாடா கூறிய கருத்துக்கள் என தகவல்கள் வைரலாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போதைய தகவல் புதிய போராட்டத்துடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News