டிரம்ப் வருகைக்காக ரூ.100 கோடி செலவிடுவதா?- பிரியங்கா கண்டனம்
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2 நாள் பயணமாக நாளை அகமதாபாத் வருகிறார். ஆக்ரா மற்றும் டெல்லிக்கும் அவர் செல்கிறார்.
டிரம்பின் வருகைக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே டிரம்பின் வருகைக்காக ரூ.100 கோடி செலவழிப்பதா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகைக்காக ரூ.100 கோடி செலவிடப்படுவதாக அறிகிறேன். ஆனால் இந்த பணம் ஒரு குழு மூலம் செலவிடப்படுகிறது. இந்த கமிட்டியில் உறுப்பினர்கள் யார் என்பதும் தெரியாது.
இந்த குழுவுக்கு எந்த அமைச்சகம் எவ்வளவு பணம் கொடுத்தது? இது போன்ற விவரத்தை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? அரசு ஏன் மறைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டிரம்ப் வருகை குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எச்-1பி விசாவை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்துவாரா? டிரம்ப் அரசு இந்தியர்களுக்கு இந்த விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து அவரிடம் மோடி பேசுவாரா?
அமெரிக்காவின் பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்தும் மோடி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.