செய்திகள்
பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு

Published On 2020-02-21 12:31 GMT   |   Update On 2020-02-21 13:21 GMT
முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக உத்தவ் தாக்கரே தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. 

இதை ஏற்க பா.ஜ.க. மறுத்ததால் கூட்டணி உடைந்தது. இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து புதிய கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவி ஏற்றார். இதன்மூலம் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு இடையிலான நீண்டநாள் உறவு முடிவுக்கு வந்தது.

சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜக வேறுவழியின்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. 
மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது மரபு. ஆனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டெல்லி செல்லாமல் இருந்து வந்தார். டிசம்பர் 6-ம் தேதி புனே வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று உத்தவ் தாக்கரே வரவேற்றார்.

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக அமையும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பதவி ஏற்று 3 மாதங்கள் ஆன நிலையில் முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவும் உடனிருந்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைத்தபின் நடைபெறும் பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News