செய்திகள்
நிர்மலா சீதாராமன் - மணீஷ் சிசோடியா சந்திப்பு

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா சந்திப்பு

Published On 2020-02-21 10:46 GMT   |   Update On 2020-02-21 13:04 GMT
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் இணைந்து வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களும் தங்கள் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். 

கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா டெல்லி துணை முதல்மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், அவருக்கு நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணீஷ் சிசோடியா இன்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது மத்திய வரிகளில் டெல்லி மாநிலத்திற்கான பங்கை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.



இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் சிசோடியா, ''தலைநகர் டெல்லியின் வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. மத்திய வரியில் இருந்து டெல்லிக்கு தரவேண்டிய பங்கை மத்திய அரசு உடனடியாக தர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் எனக்கு உறுதியளித்துள்ளார்’’ என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News