செய்திகள்
தர்மேந்திர பிரதான்

கியாஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையும்: பெட்ரோலிய மந்திரி நம்பிக்கை

Published On 2020-02-21 02:20 GMT   |   Update On 2020-02-21 02:20 GMT
சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இந்த மாதம் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. எனினும் அடுத்த மாதம் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று பெட்ரோலிய மந்திரி நம்பிக்கை தெரிவித்தார்.
ராய்ப்பூர் :

மானியம் இல்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் ரூ.147 அதிகரித்தது. இது பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் சத்தீஸ்காரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்கிறதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வதாக கூறுவது தவறு. சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இந்த மாதம் விலை உயர்ந்து உள்ளது. எனினும் அடுத்த மாதம் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

குளிர்காலத்தில் கியாஸ் பயன்பாடு அதிகரித்ததால் இந்த துறையில் ஒரு அழுத்தம் ஏற்பட்டதாக கூறிய பிரதான், அதனால்தான் இந்த மாதம் விலை அதிகரித்ததாகவும், அடுத்த மாதம் விலை குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

Similar News