ஜாமியா பல்கலைக்கழகத்தில் வன்முறை- போலீசார் சிசிடிவி கேமராவை உடைக்கும் வீடியோ காட்சி
புதுடெல்லி:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 15-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதில் பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினார்கள்.
மேலும் போலீசாரும், துணை ராணுவத்தினரும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைந்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்த நிலையில் பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்துக்குள் போலீசார் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோகள் நேற்று முன்தினம் வெளியானது.
இந்த வீடியோவில் மாணவர்கள் மீது போலீசாரும், துணை ராணுவத்தினரும் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு தடிகளால் தாக்கியது இடம் பெற்றிருந்தது.
சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்த நிலையில் இந்த வீடியோக்காளை வெளியிட்டது யார்? என்பது தெரியவில்லை.
தற்போது பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒரு வீடியோவில் போலீசார் பல்கலைக்கழக பொருட்களை உடைத்து சேதப்படுத்துவது போலவும், அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை உடைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு வீடியோவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீசாரின் தடியடியில் இருந்து தப்பித்து நூலகத்திற்குள் தஞ்சம் அடைவது போலவும், அங்குள்ள இருக்கைகளை வைத்து கதவை திறக்கவிடாமல் தடுப்பது போலவும் காட்சிகள் உள்ளது.
இதேபோல போலீசார் மீது வாலிபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடந்துவது போலவும் காட்சி உள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கிய காட்சிகள் மாலை 5.10 மணிக்கு பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் காட்சிகள் மாலை 6.21 மணிக்கு பதிவாகி உள்ளன.
இந்த வீடியோக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.