செய்திகள்
இரண்டாவதும் பெண் குழந்தை: விரக்தியில் கொலை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாய்
மத்திய பிரதேசத்தில் ஆணுக்கு பதில் பெண் பிறந்ததால் பிறந்து இரண்டே நாட்களேயான குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
போபால்:.
மத்திய பிரதேச மாநிலம் ஷஜாபூர் மாவட்டம் அம்ஹோரியா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு சிங் (26). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த இவருக்கு கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 12) அம்மாவட்ட மருத்துவமனையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் மஞ்சு வீடு திரும்பினார். ஆனால், தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என எதிர்பார்த்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார்.
இந்நிலையில், விரக்தியின் உச்சத்திற்கே சென்ற மஞ்சு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிறந்து இரண்டே நாட்களே ஆன தனது புதிய பெண் குழந்தையை இரக்கமின்றி கூர்மையான ஆயுதத்தை கொண்டு தலையிலும், வயிற்று பகுதியிலும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை அருகில் வசித்துவந்த மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
தாயின் இந்த கொடூர தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மஞ்சு சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் இரண்டே நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.