செய்திகள்
மாணவி தர்ணா

காதலன் வீட்டு முன்பு மாணவி தர்ணா- போலீசார் பேச்சுவார்த்தை

Published On 2020-02-17 08:40 GMT   |   Update On 2020-02-17 08:40 GMT
திருப்பதியில் காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
திருமலை:

திருப்பதி புறநகர் பகுதியான அவிலாவை சேர்ந்த (18) வயது மதிக்கத்தக்க இளம்பெண். பீளேரில் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே கல்வி நிலையத்துக்கு சொந்தமான கல்லூரியில் திருப்பதி கொர்லகுண்டா பகுதியை சேர்ந்த சந்திரமவுலி என்பவர் பி.டெக். படித்து வந்தார். இருவரும் காதலித்தனர்.

சந்திரமவுலி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். சந்திரமவுலி படிப்பு முடிந்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் வேலைக்காக பெங்களூரு சென்றதும் தன்னுடைய காதலியுடன் பேசாமல் இருந்து வந்தார். மாணவி, காதலனுடன் பேச முயன்றும் முடியவில்லை.

இந்த நிலையில் அந்த மாணவி திருப்பதிக்கு வந்து சந்திரமவுலியின் வீட்டு முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆசை வார்த்தைகள் கூறி காதலித்த சந்திரமவுலி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். காதலித்து கைவிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பதி அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் விசாரித்தனர். அதற்கு மாணவி பெங்களுருவில் இருந்து சந்திரமவுலி வரும்வரை நான் போராட்டத்தில் ஈடுபடுவேன், போராட்டத்தை கைவிட மாட்டேன் அவர் வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.

போலீசார் சந்திரமவுலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்ததும் மாணவி போராட்டத்தை கைவிட்டார்.

இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News