செய்திகள்
டி.கே.சிவக்குமார்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகிறார் டி.கே.சிவக்குமார்

Published On 2020-02-17 02:23 GMT   |   Update On 2020-02-17 02:23 GMT
கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதுபற்றி இன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு :

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையாவும் ராஜினாமா செய்தார்கள். அவர் களது ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் அங்கீகரிக்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. ஆனாலும் மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் பதவிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாநில தலைவராக டி.கே.சிவக்குமாரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.

ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல், மாநில தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் இடையே போட்டி, கருத்து வேறுபாடுகள் ஆகிய காரணங்களால் மாநில தலைவரை நியமிக்காமல் காங்கிரஸ் மேலிடம் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக கர்நாடக மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாநில தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மார்ச்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, தினேஷ் குண்டுராவின் ராஜினாமாவை அங்கீகரிப்பதுடன், புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, புதிய தலைவராக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட உள்ளதாகவும், இதுபற்றி இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் சித்தராமையாவின் ராஜினாமாவை அங்கீகரிக்காமல், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் தொடருவதற்கும் கட்சி மேலிடம் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.



ஆனால் சித்தராமையா வசம் உள்ள சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை பறிப்பதா? அல்லது அந்த பதவியிலும் அவரை தொடரும்படி அனுமதிப்பதா? என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது. சித்தராமையா வசம் உள்ள சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்தால், அந்த பதவி பரமேஸ்வருக்கு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இதுதவிர வடகர்நாடகத்தில் காங்கிரசை பலப்படுத்தும் விதமாக ஈஸ்வர் கன்ட்ரே வகித்து வரும் செயல் தலைவர் பதவியில் தொடா்ந்து இருக்கவும், அத்துடன் கூடுதலாக 2 செயல் தலைவர்களை நியமிக்கவும் கட்சி மேலிடம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி, பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சதீஸ் ஜார்கிகோளிக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதுபோல, மும்பை-கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவருக்கும் செயல் தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதுபோல, எதிர்க்கட்சி தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்துள்ள முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல், தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இதன் மூலம் அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தவும், மூத்த தலைவர்கள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை போக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News