செய்திகள்
ஜேபி நட்டா

இனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா

Published On 2020-02-17 01:48 GMT   |   Update On 2020-02-17 01:48 GMT
மகாராஷ்டிராவில் இனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
மும்பை :

நவிமும்பை நெருலில் மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைய தான் மக்கள் தீர்ப்பு அளித்து இருந்தனர். ஆனால் சிலர் (சிவசேனா) தங்களது சுய நலத்திற்காக பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுவிட்டனர்.

ஆட்சி அதிகாரத்துக்காக எதிர்வரிசையில் இருந்தவர்களுடன் சேர்ந்து விட்டனர். எனவே மகாராஷ்டிராவில் தற்போது அமைந்து உள்ள மாநில அரசாங்கம் (மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு) இயற்கைக்கு மாறானது. நம்பதகாதது. அடுத்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தான் வெற்றி பெறும். இனி வரவிருக்கும் அனைத்து தேர்தல்களையும் பாரதீய ஜனதா தனியாக சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

முந்தைய ஆட்சியின் போது, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னேறி கொண்டு இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது வளர்ச்சி நிறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News