செய்திகள்
ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்திய காட்சி

சி.ஏ.ஏ.வை திரும்ப பெறக்கோரி ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி

Published On 2020-02-16 11:01 GMT   |   Update On 2020-02-16 11:01 GMT
மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ.வை திரும்ப பெறக்கோரி ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வீடு நோக்கி பேரணியாக சென்றனர்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்களும், குழந்தைகளும் திரண்டு வந்து போராட்டங்களிள் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக பா.ஜனதா தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை டெல்லி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தனர். இது அந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நேற்று இரவு அறிவித்தனர்.

இன்று பிற்பகல் அவர்கள் பேரணியாக அமித்ஷாவின் வீடு நோக்கி சென்றார்கள். ஊர்வலத்தின் முடிவில் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்கள்.


போராட்டக்காரர்கள் ஒரு சிலர் மட்டுமே அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என்று டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் தாங்கள் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். இதை டெல்லி போலீசார் ஏற்கவில்லை.

அவர்கள் பேரணியாக செல்ல டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

Tags:    

Similar News