செய்திகள்
கேரளா உள்ளிட்ட 3 மாநில பாஜக தலைவர்கள் நியமனம்
மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பா.ஜ.க. தலைவர்களை அக்கட்சியின் தலைமை இன்று நியமித்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜ.க. மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே, பா.ஜ.க. தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கான பா.ஜ.க. தலைவர்களை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று நியமித்துள்ளார்.
அதன்படி, கேரள மாநில பா.ஜ.க. தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் மாநில பா.ஜ.க. தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களாக தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.