செய்திகள்
ரன்வேயில் குறுக்கே வந்த ஜீப்... அவசரமாக டேக் ஆப் செய்ததால் சேதமடைந்த ஏர் இந்தியா விமானம்
புனே விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டபோது, ஓடுபாதையில் ஜீப் மற்றும் ஒரு நபர் குறுக்கே வந்ததால் அவசரமாக டேக் ஆப் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
புனே விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. டேக் ஆப் செய்வதற்காக ஒடுபாதையில் சுமார் 222 கிமீ வேகத்தில் சென்றது. அப்போது, திடீரென ஓடுபாதையில் ஒரு ஜீப் மற்றும் ஒரு நபர் வந்ததை பைலட்டுகள் கவனித்தனர்.
இதனால் பைலட்டுகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், ஜீப் மற்றும் அந்த நபர் மீது மோதுவதை தவிர்க்க, விமானத்தை அவசரமாக டேக் ஆப் செய்தனர்.
இதனால் விமானத்தின் பின்பகுதி ஓடுதளத்தில் தீப்பொறி பறக்க உரசியபடி உயரே எழுந்து பறந்தது. இதில் விமானம் லேசாக சேதமடைந்தது. எனினும், தொடர்ந்து விமானத்தை செலுத்திய பைலட்டுகள், டெல்லியில் பாதுகாப்பாக தரையிறக்கினர். அத்துடன் அந்த விமானத்தின் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரை (சிவிஆர்) விமானத்தில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் படி ஏர் இந்தியா நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.