செய்திகள்
காஷ்மீரில் கையெறி குண்டுடன் பைக்கில் வந்த மாணவர்கள்
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் நேற்று கையெறி குண்டுடன் பைக்கில் வந்த 3 மாணவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரின் மஹர்மல் பேஹ் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் மாணவர்கள் சிலர் வெடிகுண்டுகளை மறைத்து கொண்டுவருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் கண்காணிப்பை தீவிர படுத்திய படையினர் மஹர்மல் பேஹ் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த 3 மாணவர்களை பாதுகாப்பு படையினர் நிறுத்தினர். மேலும், அவர்கள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் மாணவர்கள் கொண்டுவந்த பையில் ஒரு கையெறி குண்டை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கையெறி குண்டை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் 3 மாணவர்களையும் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.