செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

நிர்பயா வழக்கு - வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-14 09:39 GMT   |   Update On 2020-02-14 12:23 GMT
நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக வினய் சர்மா சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. 

இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும்போது, சமூக விசாரணை அறிக்கை, மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் மனுதாரர் வினய் சர்மாவின் பங்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவில்லை. கருணை மனுவை நிராகரிப்பது தொடர்பான பரிந்துரையில் ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி கையெழுத்திடவில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிட்டார்.  

இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். இதுதொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையில் ஆளுநரும், உள்துறை மந்திரியும் கையெழுத்திட்டிருப்பதாக கூறினர். தொடர்ந்து வாதம் நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, உடல் மற்றும் மனதளவில் குற்றவாளி நலமுடன் உள்ளார் என்றார். அதைத்தொடர்ந்து, வினய் சர்மா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News