செய்திகள்
லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 12 பேர் பலி - உ.பி.யில் சோகம்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று கண்டெய்னர் லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் பயணிகள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:
புது டெல்லியில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று நேற்று இரவு பீகார் மாநிலம் மோதிஹரி நகரம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ தேசிய நெடுச்சாலையில் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் முன்னே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சொகுசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 8 பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயர்க்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.