செய்திகள்
ஜம்மு : மீட்பு பணியின் போது கட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பலி
ஜம்முவில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் அதில் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டலேப் டிலோ புறநகரின் ஷா மில் என்ற பகுதியில் உள்ள ஒரு மூன்றடுக்கு கட்டிடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து நடந்த கட்டிடத்தில் சிக்கியிருந்த இருந்த பொதுமக்கள் 4 பேர் வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்த மீட்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் தீயணைப்பு வீரர்கள் 5 பேர் சிக்கிகொண்டனர்.
இதையடுத்து, சக வீரகள் துரிதமாக செயல்பட்டு 2 வீரர்களை உடனடியாக மீட்டனர். ஆனால் எஞ்சிய வீரர்கள் 3 பேர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கி மீட்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.