செய்திகள்
காஷ்மீரில் வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள் சுற்றுப்பயணம்
ஐரோப்பிய யூனியன், வளைகுடா நாடுகளை சேர்ந்த தூதர்கள் 25 பேர் நேற்று காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு களநிலவரத்தை ஆய்வு செய்தனர்.
காஷ்மீர்:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையின் போது காஷ்மீர் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்து வருகிறது. துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுவருகின்றனர்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிலவரம் எப்படி உள்ளது என்பதை பார்வையிட கடந்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 15 தூதர்கள் ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த தூதர்கள் 25 பேர் இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்த வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் நீதிபதி கிடா மிட்டல், ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு, வணிகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், மத அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.