செய்திகள்
தீயணைப்பு பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடம்- 2 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்முவில் தீயணைப்பு பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு:
ஜம்மு நகரின் டல்லப் டில்லோ பகுதியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக வெப்பத்தினால் விரிசல் அடைந்த அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 3 தளங்கள் கொண்ட கட்டிடம், திடீரென விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உதவி செய்தவர்கள் என சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு தீயணைப்பு வீரர் உள்ளிட்ட சிலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.