செய்திகள்
உத்தவ் தாக்கரே

மனதின் குரலை மக்களின் குரல் வென்றுவிட்டது: உத்தவ் தாக்கரே

Published On 2020-02-12 01:48 GMT   |   Update On 2020-02-12 01:48 GMT
மனதின் குரலை மக்களின் குரல் வென்றுவிட்டது என்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார்.
மும்பை :

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார். தனது வாழ்த்து செய்தியில் மராட்டியம் மற்றும் சிவசேனா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு உள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்ததை மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டெல்லியில் ஒரு அரசாங்கம் (மத்திய அரசு) டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற முழு அரசு எந்திரத்தையும் பயன்படுத்தியது. ஆனால் துடைப்பம் முன் அது தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் எதிரிகள் அனைவரும் தேசவிரோதிகள். தாங்கள் மட்டும் நாட்டை நேசிப்பவர்கள் என்ற மாயையில் சிலர்(பா.ஜனதா) இருந்தனர்.



டெல்லி மக்கள் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கான இடத்தை காட்டிவிட்டனர். கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார். டெல்லியில் உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, சர்வதேச பிரச்சினையை கொண்டு வந்து மக்களின் மனதை மாற்ற பாரதீய ஜனதா முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை.

டெல்லியில் ‘மன் கி பாத்'துக்கு (பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி) பதிலாக ‘ஜன் கி பாத்'தை (மக்களின் குரல்) தான் மக்கள் வெற்றி அடைய செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News