செய்திகள்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லைக்குள் தவறுதலாக அத்துமீறி நுழைந்த 50 வயது நிரம்பிய பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு படையினர் எல்லையோரம் உள்ள மாம்டாட் பகுதியில் ரோந்து செய்தபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையின் அந்த நபர் சாதிக் (50) என்பதும் அவர் பாகிஸ்தான் நாட்டின் உக்ரா கிராமத்தை சேர்ந்தவர் என்பதையும் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அவர் பாகிஸ்தான் நாட்டின் பணம் 17 ரூபாய் வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எல்லையோர கிராமத்தில் வசித்ததாலும், வயது முதிர்வு காரணமாகவும் சாதிக் வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த காரணத்திற்காக சாதிக்கை கைது செய்த பாதுகாப்பு படையினர் பெரோஸ்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.