செய்திகள்
டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் இன்று காலை சந்திக்க உள்ளனர்.
புதுடெல்லி:
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8–ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது. தொடக்கம் முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.
இதன்படி, டெல்லி சட்டசபை தேர்தலின் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் சந்திக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் டெல்லி சட்டசபைக்கான ஆம் ஆத்மி கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.