செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-11 14:38 GMT   |   Update On 2020-02-11 14:38 GMT
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கவர்னர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், பேரறிவாளன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வுக்கு முன் வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. கவர்னருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது. மேலும், தமிழக அரசின் தீர்மானம் குறித்து கவர்னரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல என தெரிவித்தார்.

7 பேர் விடுதலை குறித்த கோப்பு கவர்னர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கவர்னருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில்  அமைச்சரவை தீர்மானம் குறித்து கவர்னரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News