செய்திகள்
ராஜஸ்தானில் பஸ் மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் இருந்து பிகில்வாரா மாவட்டம் நோக்கி பஸ் ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்தது. பிஹோட் என்ற பகுதியை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் எதிரே வந்த ஜீப் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணம் செய்தவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் மாநில முதல்மந்திரி அசோக் கெலாட் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.