சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை
அமராவதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, 3 தலைநகரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், கம்பெனிகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள்.மேலும் அவரது மகன் லோகேசுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
டெல்லியை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் சீனிவாசராவ், லோகேசின் முக்கிய உதவியாளர் கிலருராஜேஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் சோதனை நடக்கிறது.
வருமானவரி அதிகாரிகள் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசாரை அழைத்து செல்லாமல் சி.ஆர்.பி.எப். படை வீரர்களை அழைத்து சென்று இருந்தனர். கடந்த சட்டசபை தேர்தலின் போது இந்த கம்பெனிகளில் அதிகளவு பணப்புழக்கம் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்று வருமானவரி துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சீனிவாசராவ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் வரை சந்திரபாபு நாயுடுவின் உதவியாளராக இருந்தார். விஜயவாடாவில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல் கடப்பா மாவட்ட தெலுங்கு தேச தலைவர் சீனிவாச ரெட்டியின் குடும்பத்தினர் நடத்தும் கம்பெனிகளில் சோதனை நடத்தினர். லோகேசின் நண்பரான கிலருராஜேஷ் சட்டசபை தேர்தலில் உதவியாளராக இருந்தார். இவர் இரண்டு கம்பெனிகளுக்கு இயக்குனராக உள்ளார்.
தெலுங்கு தேச தலைவர் வினோத்குமாரின் சகோதரர் சீனிவாசராவின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர் 19 நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார்.