செய்திகள்
ஆதார், பான் கார்டு,

ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் ‘பான்’ எண் வழங்கும் நடைமுறை இந்த மாதமே அமல் - மத்திய அரசு

Published On 2020-02-06 20:51 GMT   |   Update On 2020-02-06 20:51 GMT
ஆதார் எண் அடிப்படையில், ஆன்லைனில் ‘பான்’ எண் வழங்கும் நடைமுறை இந்த மாதமே அமலுக்கு வந்து விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஆதார் எண்ணுடன் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதன்படி 30¾ கோடி பான் எண்கள், ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.

கடந்த மாதம் 27-ந்தேதி நிலவரப்படி 17 கோடியே 58 லட்சம் பான் எண்கள், ஆதார் எண்ணுடன் இன்னும் இணைக்கப்பட வேண்டும்.

இதை செய்து முடிக்க அடுத்த மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது அவர் விரிவான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பாமல், ஆதார் எண் அடிப்படையில், ஆன்லைனில் உடனடியாக பான் எண் அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி மத்திய வருவாய் துறை செயலாளர் அஜய் பூ‌‌ஷண் பாண்டே கூறியதாவது:-

ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் வழியாக உடனடியாக பான் எண் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. எனவே இந்த மாதமே ஆன்லைன் வழியாக ஆதார் எண் அடிப்படையில் பான் எண் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

இப்படி பான் எண் பெற விரும்புகிறவர்கள், வருமான வரி இணையதளத்துக்கு சென்று தங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். உடனே ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. என்று அழைக்கப்படுகிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு அனுப்பப்படும். ஆதார் விவரங்களை சரிபார்க்க ஓ.டி.பி. பயன்படுத்தப்படும்.

அதைத் தொடர்ந்து பான் எண் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர் ஆன்லைனில் இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது வரிசெலுத்துவோர், விண்ணப்பம் நிரப்பி அனுப்புவதில் இருந்து விடுபட உதவும். வரிசெலுத்துவோரின் முகவரிக்கு பான் அட்டையை அனுப்பி வைப்பதற்கான வருமான வரித்துறையின் செயல்முறையையும் இது எளிதாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News