செய்திகள்
வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லா

இன்றோடு 6 மாதங்கள் நிறைவு - முடிவுக்கு வராத காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகளின் வீட்டுக்காவல்...

Published On 2020-02-05 08:35 GMT   |   Update On 2020-02-05 08:35 GMT
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் முன்னாள் முதல்மந்திரிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வீட்டுக்காவலில் உள்ளனர்.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ராணுவம் பெரும் அளவில் குவிக்கப்பட்டது. போக்குவரத்து, இணையதளம் உள்ளிட்ட அனைத்து சேவைகள் துண்டிக்கப்பட்டது. 

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

ஆகஸ்ட் 5-ம் தேதி பாராளுமன்றத்திற்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 

காஷ்மீரில் செயல்பட்டுவந்த பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் காஷ்மீரில் நிலைமை தற்போது சீரடைந்துள்ளது. பொது அமைதிக்கு எந்த இடையுறும் செய்யமாட்டோம் என்ற உத்திரவாதத்தின் அடைப்படையில் பல அரசியல் தலைவர்கள் தற்போது காஷ்மீரில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.   



இதற்கிடையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் எந்தவித விசாரணையிம் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம். 

இது தவிர முன்னாள் முதல்மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட மேலும் சில அரசியல் தலைவர்கள்  170 என்ற சட்டப்பிரிவின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சட்டத்தின் படி ஒரு நபரை 6 மாதங்கள் மட்டுமே விசாரணையின்றி காவலில் வைக்கலாம். அதன் அடிப்படையில் காஷ்மீர் அரசியல் தலைவர்களின் வீட்டுக்காவல்  இன்றுடன் நிறைவடைகிறது. 

இதைத்தொடர்ந்து  உமர் அப்துல்லா மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவல் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி இன்று காலை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 
Tags:    

Similar News