செய்திகள்
எடியூரப்பா

மந்திரி பதவி கேட்டு எடியூரப்பாவுக்கு எதிராக எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி

Published On 2020-02-05 05:20 GMT   |   Update On 2020-02-05 05:20 GMT
மந்திரி பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதை இறுதி செய்ய முடியாமல் எடியூரப்பா தவித்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்தது.

அதன் பிறகு காலியாக இருந்த 15 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா பிரசாரத்தின் போது உறுதி அளித்திருந்தார்.

அதன்படி நாளை (6-ந் தேதி )மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அப்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 பேருக்கும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் எடியூரப்பா அறிவித்தார்.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று தகவல் வெளியானது. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

அவரை சமாதானப்படுத்தி கேபினட் அந்தஸ்துடன் வாரிய தலைவர் பதவியை வழங்குவதாக எடியூரப்பா உறுதியளித்தார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்தார்.

இதற்கிைடையில் எடியூரப்பாவை பெங்களூருவில் ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, தனக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதற்கு எடியூரப்பா, மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி வழங்க இயலாது என்றும், வரும் நாட்களில் மந்திரிசபையை மாற்றி அமைக்கும்போது பதவி வழங்குவதாகவும், தற்போதைக்கு அவருக்கு கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி வழங்குவதாகவும் கூறினார். இதை ரமேஷ் ஜார்கிகோளி ஏற்கவில்லை.

பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் லிம்பாவளி, உமேஷ்கட்டி ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. அவர்களுடன் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த சி.பி.யோகேஷ்வருக்கும் மந்திரி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்தார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்காற்றியதால் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.


இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டசபை மற்றும் மேல்சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மந்திரி பதவி வழங்குவது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த ராஜூகவுடா எம்.எல்.ஏ. தலைமையில் ஐதராபாத்கர்நாடக பகுதியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு ராஜூகவுடா எம்.எல்.ஏ. கூறியதாவது:

கல்யாண கர்நாடக அதாவது ஐதராபாத் கர்நாடக பகுதிக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மந்திரிசபையில் இடம் வழங்க வேண்டும் என்று நாங்கள் முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம். சட்டசபை, மேல்சபை உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மந்திரி பதவி வழங்குவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது சரியல்ல. எங்கள் பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இங்கு ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். இதில் என்ன தவறு உள்ளது. இது கட்சி கட்டுப்பாட்டை மீறியது ஆகாது. நாங்கள் ரெசார்ட் ஓட்டலில் கூட்டம் நடத்தவில்லை. எங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம்.

மந்திரி பதவியை முதல்-மந்திரியிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது?. மீண்டும் நாங்கள் நாளை (அதாவது இன்று) இங்கு கூடி ஆலோசிக்க உள்ளோம். இதுகுறித்து நாங்கள் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து எங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு ராஜூகவுடா கூறினார்.

அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திப்பாரெட்டி, ராமதாஸ், நேரு ஹோலேகர் உள்ளிட்டோர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கத்தின்போது தங்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் பா.ஜனதாவை சேர்ந்த நேரு ஹோலேகர், சீனிவாஸ்ஷெட்டி, எஸ்.அங்கார், கே.ஜி.போப்பையா, ராமதாஸ், கருணாகரரெட்டி, ரவீந்திரநாத், கூளிஹட்டி சேகர் என 10க்கும் மேற்பட்டவர்கள் மந்திரி பதவி கேட்டுள்ளனர்.

குறிப்பாக சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்றும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் குமாரசாமி. பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் தற்போது தனக்கும் மந்திரி பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

பள்ளிப்பருவம் முதலே எடியூரப்பாவின் சிஷ்யனாக இருந்து வருகிறேன். மற்ற கட்சிகளில் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய தலைவர்களாகவும், மந்திரி பதவி உள்பட முக்கிய பதவிகளையும் வகித்து வருகிறார்கள்.

நானும் பா.ஜனதாவை வளர்க்க பாடுபட்டவன். ஆனால் என் சமுதாய மக்கள் யாரும் பா.ஜனதாவில் முக்கிய தலைவர்களாகவோ, மந்திரிகளாகவோ இல்லை.அதனால் எனக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்று நான் முதல் மந்திரி எடியூரப்பாவிடம் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மந்திரி பதவி கொடுத்தால் நான் திறம்பட நிர்வகிப்பேன்.

மந்திரியாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். நானும் மந்திரியாக வேண்டும் என்ற ஆசையில்தான் இருக்கிறேன். எனக்கும் மந்திரி பதவி கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் முதல் மந்திரி எடியூரப்பாவின் கையில் உள்ளது. மந்திரி பதவி வழங்காமல் இருந்தாலும் எனக்கு வருத்தம் இல்லை.

ஆனால் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது மந்திரி பதவி வழங்க வேண்டும். என் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களில் யாருக்காவது மந்திரி பதவியை எடியூரப்பா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதை இறுதி செய்ய முடியாமல் எடியூரப்பா தவித்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே முதல்மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது தவளகிரி இல்லத்தில் மந்திரி பதவி ஏற்கவுள்ள பைரதி பசவராஜ், நாராயணகவுடா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News