செய்திகள்
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா

ஜாமியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை - அமித்ஷா

Published On 2020-01-30 14:00 GMT   |   Update On 2020-01-30 14:00 GMT
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே போராட்டம் நடத்தியோர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே இன்று குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 

இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

அப்போது போராட்ட கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்ம நபர் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு மாணவர் காயமடைந்தார்.

இதற்கிடையில், ஜாமியா பகுதியில் சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், பொதுமக்களும் இன்று மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் ஜாமியா பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. நிலைமையை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா கூறுகையில்,'' ஜாமியா பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் நான் பேசியுள்ளேன். 

மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளேன். இது போன்ற சம்பவங்களை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பமுடியாது.  

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே, டெல்லியின் பிற பகுதிகளை விட்டுவிட்டு உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள். இப்போது களம் உங்களிடம் இருந்து நழுவிவிட்டது. இந்த முறை டெல்லியில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும்'' என்றார்.

இதற்கிடையில், டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமியா துப்பாக்கிச்சூடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' டெல்லியில் என்ன நடக்கிறது? சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கை கவனித்துக் கொள்ளுங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News