செய்திகள்
மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன்

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை - பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

Published On 2020-01-29 19:51 GMT   |   Update On 2020-01-29 19:51 GMT
இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில், ‘இந்தியாவின் அண்டை நாட்டு முதல் கொள்கை: பிராந்திய உணர்வுகள்’ என்பது பற்றிய 12-வது தெற்காசிய மாநாடு நேற்று நடந்தது. ‘இட்சா’ என்று அழைக்கப்படுகிற பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சிந்தனை அமைப்பின் சார்பில் நடந்த இந்த மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வந்துள்ள பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக எச்சரித்து பேசினார். அவர் கூறியதாவது:-

இந்த பிராந்தியத்தில் கணக்கற்ற உயிரிழப்புகளுக்கு வழிநடத்திய பயங்கரவாதத்தின் சவால்களை சந்திக்காத நாடே இல்லை.
ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் (பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை தனது பிராந்திய ஈடுபாட்டின் வரையறுக்கப்பட்ட ஒரு அம்சமாக விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது.

அந்த நாடுதான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளி, கட்டமைப்பாளர், ஏற்றுமதியாளர். அடிப்படைவாதம் என்பது பயங்கரவாதத்தின் உள்ளடங்கிய அம்சம். பயங்கரவாதத்துக்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று. அதற்கு எல்லைகள் தெரியாது.

பயங்கரவாதத்துக்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ள அடிப்படைவாதம், நமது பிராந்தியத்தில் வளர்ந்து வருகிறது. நாம் அனைவரும் அதற்கு எதிராக கரம் கோர்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதை சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல இந்தியா முயற்சித்துள்ளது. தனது அண்டை நாடுகளின் முதல் கொள்கை செயல்திட்டத்தில் சேர்த்தும் உள்ளது.

பயங்கரவாதத்தை இந்தியா சம அளவில் நிராகரித்துள்ளது. இதுதான் பயங்கரவாதத்தை தங்கள் வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துகிற நாடுகளுக்கு எதிராக நமது கொள்கையை நன்றாக மாற்றி அமைக்க வழிவகுத்தது.

புதிய இந்தியா தனது மண்ணில், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகிறபோது, அதை இனியும் வெறுமனே பார்வையாளராக அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதையும் காட்டி இருக்கிறோம். நாம் நமது மக்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம்.

நமது நாடு அகிம்சையை, பயபக்தியை, பொறுமையை கொள்கையாக கொண்ட நாடு என்பதையும் காட்டி இருக்கிறோம். ஆனால் இனி நமது மக்களை பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News