பிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அவர் இந்தியா வருவதை அமெரிக்காவும் உறுதி செய்து இருந்தது.
இதற்கிடையே டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார். 26-ந்தேதி வரை அவர் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அவரது வருகை குறித்த தேதி இன்னும் அதிகாரப் பூர்வ மாக வெளியிடப்படவில்லை.
டிரம்ப் வருகையின் போது இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மோடியுடன் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை அகமதாபாத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மோடி அமெரிக்கா சென்ற போது மோடி நலமா? என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. அதேபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார். அமெரிக்காவில் பெரும் பாலான இந்தியர்கள் இருப்பதால் அவர்களது வாக்குகளை கவர இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
குஜராத்தை சேர்ந்தவர்கள் தான் அமெரிக்காவில் அதிகமாக உள்ளனர். இதன் காரணமாகவே பிரமாண்ட நிகழ்ச்சியை அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் டிரம்பின் இந்தியா வருகை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் தான் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.