செய்திகள்
குடியரசு தினத்தன்று சர்ச்சையில் சிக்கி தவித்த ராகுல் காந்தி
குடியரசு தினத்தன்று சமூக வலைதள சர்ச்சை பதிவுகளில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சிக்கி தவித்தார்.
குடியரசு தின கொண்டாட்டங்களின் போது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி புகைப்படம் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் வைரலானது. வைரல் புகைப்படத்தில் ராகுல் காந்தி தேசிய கொடிக்கு இடது கையில் மரியாதை செய்யும் வகையில் காணப்படுகிறார்.
புகைப்படத்துடன் வைரலாகும் பதிவு ஒன்றில், ‘எந்த கையில் மரியாதை செய்ய வேண்டும் என்பதையே அறியாத இவர் தான் தலைசிறந்த தலைவர். மேலும் இவர் பிரதமர் ஆக வேண்டும் என நினைக்கிறார்’ எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் மறுபக்கமாக திருப்பப்பட்டு இருப்பது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தி இடது கையில் மரியாதை செலுத்தவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
மேலும், இந்த புகைப்படம் உண்மையில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாகும். எனினும், ராகுல் காந்தி இடது கையில் மரியாதை செலுத்தியதாக நினைத்து சமூக வலைதளங்களில் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் அடங்கிய பல்வேறு செய்திகள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படம் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடும் வலைதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற 65-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்டதாக இந்த வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.