செய்திகள்
நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்
நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் 2 பேர், திகார் சிறை நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த புதிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் ஆகியோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
கருணை மனு மற்றும் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு போதிய ஆவணங்களை டெல்லி திகார் சிறை நிர்வாகம் வழங்காமல் தாமதிப்பதாக கூறி இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் தண்டனையை தாமதம் செய்ய தந்திரம் செய்வதாகவும், குற்றவாளிகளுக்கு தேவையான ஆவணங்களை சிறை நிர்வாகம் ஏற்கனவே வழங்கிவிட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்ற நீதிமன்றம், குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இவ்வழக்கின் மற்ற இரண்டு குற்றவாளிகளான வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.