செய்திகள்
கனடாவில் தமிழக மாணவி மீது தாக்குதல் - பெற்றோருக்கு விசா வழங்க வெளியுறவுத்துறை மந்திரி உத்தரவு
கனடாவில் தமிழக மாணவி ராச்சல் ஆல்பெர்ட் தாக்கப்பட்டது தொடர்பாக, அவரது பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த ராச்சல் ஆல்பெர்ட் (23), என்ற கல்லூரி மாணவி கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
கடந்த புதன்கிழமை இரவு டொரொண்டோ பகுதியில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த ராச்சல் ஆல்பெர்ட்டை மர்ம நபர் வழி மறித்துள்ளார். தனது கையில் இருந்த கத்தியால் மாணவியின் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்து அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு சென்றிருக்கிறார்.
உயிருக்குப் போராடிய நிலையில் வந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மையம் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது அந்த மாணவி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக டொரொண்டோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை ரொனால்ட் என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, தனது அன்பிற்குரிய ராச்சல் ஆல்பெர்ட்டுக்கு உதவி புரிய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன் ராச்சலின் குடும்பத்தினர் நீலகிரியில் உள்ள குன்னூரில் வசிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கனடாவில் தமிழக மாணவி ராச்சல் ஆல்பெர்ட்டின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய மாணவி ராச்சல் ஆல்பெர்ட், டொரொண்டோவில் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு உடனே விசா கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாணவியின் குடும்பத்தினர் உடனே +91 9873983884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.